புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் அனைவரும் சிறைத் துறை அதிகாரிகள் முன்பு சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது. மேலும், குற்றவாளிகள் 11 பேரும் நீதிமன்றத்தின் அசல் காலக்கெடுவான ஜன.21-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு, “சரணடைவதை தள்ளிப்போடுவதற்காக மனுதாரர்கள் கூறியிருக்கும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் ஜன.8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், “குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மகாராஷ்டிர அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது. அதேநேரம், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் விசாரணைக்கு தகுதியானவை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வழக்கின் குற்றவாளிகள் பலர் சிறையில் சரணடைவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் சரணடைவதை தள்ளிப் போடுவதற்கு பல்வேறு காரணங்களைத் தெரிவித்திருந்தனர். வீட்டுப்பொறுப்புகள், மகனின் திருமணம், குளிர்கால அறுவடை போன்றவை அவற்றில் சில. இந்த நிலையில், இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
குற்றவாளிகள் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம். இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிராவில் நடந்ததால், புதிதாக நிவாரணம் கேட்டு மகாராஷ்டிரா அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
வழக்கு பின்னணி: கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தனது குடும்பத்தினரை படுகொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 11 பேரையும் முன்கூட்டியே விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜன.8-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது.