பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு எஸ்.பி., ஆனந்த் அறிவுரை படி, புதுச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜிவ் தலைமையிலான போலீசார், நேற்று காலை கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரிகுருடிக்காடு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த காரை நிறுத்திய போது, நிற்காமல் சென்றுள்ளது. ஜீப்பில் விரட்டி சென்று, காரை மடக்கினர். சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இன்றி, 1.90 கோடி ரூபாய் ஹவாலா பணம் பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமதுகுட்டி, 41, புத்தனங்காடியை சேர்ந்த முகமதுநிசார், 36, என, தெரியவந்தது.
தமிழகத்தில், கோவையில் இருந்து, மலப்புரம் பகுதியில் ஒருவரிடம் ஒப்படைக்க பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதில், கோவையில் இருந்து பணத்தை கொடுத்தவர், மலப்புரத்தில் பணத்தை பெறுபவர் குறித்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement