பீஸ்ட் படம் தயாரித்தவர்களுக்கே நம்பிக்கை இருந்திருக்காது: மீண்டும் வில்லன் நடிகரின் சர்ச்சை பேச்சு

கடந்த 2022ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் பாதி கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்துமே ஒரு ஷாப்பிங் மாலுக்குள் அமைந்துவிட்டதே இந்த படத்தில் மிகப்பெரிய மைனஸாக மாறிவிட்டது. இந்த படத்தில் வில்லன் நடிகர்களில் ஒருவராக மலையாள திரையுலகை சேர்ந்த ஷைன் டாம் சாக்கோ என்பவர் நடித்திருந்தார். தசரா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களிலும் இவர் வில்லனாக நடித்துள்ளார்.

பீஸ்ட் படம் வெளியான சமயத்தில் இவர் அளித்த பேட்டியில், தனது கதாபாத்திரத்தை வீணடித்து விட்டார்கள் என்றும் அதேபோல விஜய் அந்த படத்தில் தனது காட்சிகளின் தன்மை உணர்ந்து நடிக்கவில்லை என்றும் கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அப்படி பேசியதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஷைன் டாம் சாக்கோ மலையாளத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விவேகானந்தன் வைரலானு என்கிற படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வரும் ஷைன் டாம் சாக்கோவிடம் தொகுப்பாளர்கள் பீஸ்ட் படத்தில் நடித்தது குறித்து தற்போதும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரும் அந்தக் கேள்வியை கடந்து செல்ல நினைக்காமல் மீண்டும் அந்த படம் குறித்து விமர்சனம் செய்யும் விதமாக பதில் அளித்து வருகிறார்.

குறிப்பாக பீஸ்ட் படத்தில் நடிக்கும்போது, உங்களுக்கு அந்தப்படம் மீது நம்பிக்கை இருந்ததா என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, “என்னை விடுங்கள்.. இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கே இந்த படத்தில் நம்பிக்கை இருந்திருக்காது” என்று சர்ச்சையாக ஒரு பதிலை கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ. இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் மீண்டும் விஜய் ரசிகர்களின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.