அயோத்தி ராமர் சிலைக்கு… கல் கொடுத்த விவசாயிக்கு அழைப்பு இல்லை!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலர் வந்து விழாவைச் சிறப்பிக்க மத்திய அரசே அழைப்பு விடுத்தது. 

இடது ஓரம் ராம்தாஸ்

ராமர் சிலையைச் செய்ய கல் வழங்கியவருக்கு அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவன்று அழைக்கப்படவில்லை; அந்த விவசாயி தலித் என்பதுதான் இதற்கு காரணம் என்று சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள குஜ்ஜேகவுடனாபுரா கிராமத்தில் வசிப்பவர் ராம்தாஸ். உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், தனது 2.14 ஏக்கர் நிலத்தில் உள்ள பாறைகளை விவசாயத்திற்காக அகற்ற முடிவு செய்து இருக்கிறார்.

உள்ளூர் குவாரி ஒப்பந்ததாரர் ஸ்ரீநிவாஸ் நடராஜ் என்பவரை பாறையை அகற்றும் பணிக்காக நியமித்துள்ளார். நடராஜ் பெரிய பாறையை மூன்றாகப் பிளந்துள்ளார்.

பிளந்த ஒரு பாறையை அகற்ற பல நாட்கள் ஆகும் என்ற நிலையில் தான், மன்னையா பாடிகர், நரேந்திர ஷில்பி மற்றும் கோபால் ஆகியோர் ராமர் சிலைக்காக ஒரு கல் தேவைப்படுகிறது என அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.

ராம்தாஸ் என்பவரின் நிலத்தில் 10 அடியில் மூன்று பெரிய பாறைகள் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர்களும் ராம்தாஸின் நிலத்தில் உள்ள பாறைகளை வந்து பார்த்து ஒன்றைச் சோதனைக்காக அயோத்திக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சிற்பி அருண் யோகி ராஜ் அந்த கல்லை ராமர் சிலை செய்ய தேர்வு செய்திருக்கிறார். 

பின்னர், அந்த கல் அறக்கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தெரிவித்து இருக்கின்றனர். மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் இருந்தவர்களுக்கு பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருக்னன் சிலைகளைச் செதுக்க மேலும் நான்கு கற்கள் வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதையும் டெலிவரி செய்து இருக்கின்றனர்.

பாறை தோண்டப்பட்டு, டெலிவரி செய்யப்பட்டு அந்த கல் சிலையாக மாறும் வரை பலரும் கடுமையாக உழைத்தனர். ஆனால், கோவில் திறப்பு விழாவிற்கு பாறையைக் கொடுத்த ராம்தாஸையும் அழைக்கவில்லை, அதற்கு உதவிய  குவாரி ஒப்பந்ததாரர் ஸ்ரீனிவாஸ் நடராஜையும் அழைக்கவில்லை. 

சிலை செய்ய எடுக்கப்பட்ட பாறை!

இது குறித்து மனம் வருந்திய நடராஜ் கூறுகையில், “ராமர் சிலை செய்வதற்காக நிலத்தில் இருந்து கல்லைத் தோண்டி எடுத்ததற்குச் சட்ட விரோத சுரங்கப்பணி செய்ததாகக் கூறி புவியியல் துறை அதிகாரிகள் 80,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

கல்லை அயோத்திக்குக் கொண்டு செல்ல நாங்கள் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை செலவிட்டோம். ஆனால், அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஸ்ரீநாத் என்ற நபரிடம் இருந்து இதுவரை 1.95 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளோம். அதுமட்டுமில்லாமல் கோவில் திறப்பு விழாவிற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’’ என்று கூறியிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.