புதுடில்லி:தலைநகர் டில்லியில் வெப்பநிலை மீண்டும் சரிந்தது. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களை அடர்ந்த மூடுபனி சூழ்ந்திருந்தது. டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 4.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
இது, சாராசரியை விட நான்கு டிகிரிகள் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
காலை 8:30 மணிக்கு புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100 மீட்டராகவும், சப்தர்ஜங்கில் 300 மீட்டராகவும் பார்வைத்திறன் பதிவாகியிருந்தது. நேற்று அதிகாலையில் இருந்தே கடுங்குளிர் நிலவியது.
பஞ்சாப், ஹரியானா
அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் மிகுந்த அடர் பனிமூட்டம் நிலவுகிறது. ஹரியனாவின் ஹிசார் நகரம் 2.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையுடன் கடுங்குளிரில் நடுங்குகிறது.
கர்னால் – 3.9, ரோஹ்தக் – 4.6, அம்பாலா – 5.6, நர்னால் – 5, பதேஹாபாத் – 4.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகிஇருந்தது.
இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் 7.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
பஞ்சாபின் அமிர்தசரஸ் – 4.3, லுாதியானா – 4.6, பாட்டியாலா மற்றும் குர்தாஸ்பூர் – 4.8, பதிண்டா மற்றும் பரித்கோட் – 5.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஜம்மு – காஷ்மீர்
காஷ்மீர் மலைப் பகுதிகளில் பனிப்பொழிவு நீடிக்கிறது. நேற்று முன் தினம் இரவு வெப்பநிலை சற்று அதிகரித்தது.
குல்மார்க், பஹல்காம், சோனாமார்க், குரேஸ், மச்சில், கர்னா துாத்பத்ரி மற்றும் ஷோபியான் ஆகிய அடர் பனிப்பொழிவு நீடிக்கிறது.
ஸ்ரீநகரின் சில பகுதிகளில் பகலில் லேசான துாறல் விழுந்தது. அதேநேரத்தில் வெப்பநிலை மைனஸ் 0.5 டிகிரி செல்ஷியஸாகவே இருந்தது.
தெற்கு காஷ்மீரில் பஹல்காம் – மைனஸ் 0.4, காசிகுண்ட் – மைனஸ் 0.2, வடக்கு காஷ்மீரில் குல்மார்க் – மைனஸ் 3.7, கோகர்நாக் – மைனஸ் 0.1, குப்வாரா – 2.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் 31 வரை பனிப்பொழிவு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துஉள்ளது.
ஹிமாச்சல பிரதேசம்
குல்லு மாவட்டம் அடல் சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதி, சம்பா மாவட்டம் பார்மூர் மற்றும் பாங்கி, ரோஹ்தங் கணவாய், பரலச்சா கணவாய், ஷிங்குலா கணவாய் மற்றும் குன்சும் கணவாய் ஆகிய இடங்களில் மிதமான பனிப்பொழிவு நீடிக்கிறது.
வரும் 31ம் தேதி வரை இது நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மத்திய மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, மாநில வானிலை ஆய்வு மையம் கணித்துஉள்ளது.
வெப்பநிலை நேற்று சிம்லாவில் 3.4, தர்மசாலா – 6.2, மணாலி – மைனஸ் 2.3, டல்ஹவுசி – 2.7, குப்ரி – 0.1, பிலாஸ்பூர் – 5.9, சோலன் – 2.2, மண்டி – 4.9, குகும்சேரி – மைனஸ் 4.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.
பைக்கை எரித்து குளிர் காய்ந்தவர்!
புதுடில்லி பிரஹலாத்பூரில் வசிப்பவர் கிஷன்குமார். கட்டட தொழிலாளி. நேற்று முன் தினம் அதிகாலை 3:00 மணிக்கு ஜி.சி. பிளாக்கில் உள்ள ஒரு தெருவில், ஆட்டோவில் உட்கார்ந்து இருந்தார். திடீரென ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து, எதிரில் இருந்த வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்பிளண்டர் பைக்குக்கு தீ வைத்தார். அந்த வண்டி தீப்பற்றி எரிவதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சிகள் அதே பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகின.
வண்டியின் உரிமையாளர் அதிகாலை 4:30 மணிக்கு வெளியே வந்த போது, தன் வண்டி தீயில் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கிஷன் குமாரை கைது செய்தனர். போலீசில் குமார் அளித்த வாக்குமூலத்தில், “கடுங்குளிரை தாங்க முடியாததால் பைக்குக்கு தீ வைத்து குளிர் காய்ந்தேன்,” என, கூறியுள்ளார்.
மது அல்லது வேறு ஏதேனும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் இதுபோன்ற செயலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும், இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்