மானாமதுரை: மானாமதுரை அருகே 13 -ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் ஊருணி பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஊருணி பகுதியில் 13-ம் நூற்றாண்டு சமணப் பள்ளி நிலதானக் கல்வெட்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கல்வெட்டில் 4 பக்கங்களிலும் எழுத்துக்கள் உள்ளன. அதில் மூன்று பக்கங்களில் முழுமையாகவும், ஒரு பக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு, அதன் கீழே எழுத்துக்கள் உள்ளன. இந்த கல்வெட்டு இரண்டே முக்கால் அடி உயரம் கொண்டது. இதில் விக்கிரமராம வளநாடு என்ற புதிய சொல் இடம் பெற்றுள்ளது.
மேலும் அதில் இடம்பெற்ற நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி, பள்ளிச் சந்தம் சொற்கள் மூலம் இக்கல்வெட்டு மாறவர்மன் விக்கிரம பாண்டியனை குறிப்பதை அறியலாம். அவரது காலம் கிபி 1268 முதல் 1281 வரை. அதில் கருங்குடி நாட்டு பெரும்பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி தேவர் என உள்ளது. இதன்மூலம் இங்கு சமணப்பள்ளி இருந்ததை அறிய முடிகிறது.
அப்பள்ளிக்கு தானம் கொடுத்த நிலத்தில் நான்கு எல்லைகளிலும் எல்லைக் கல்கள் நாட்டி, வரிகளை பிரித்து பூஜைகள் நடத்தவும், அது சூரியன், சந்திரன் உள்ளவரை செல்லுபடியாகும் எனவும் அரசு அலுவலர்களின் கையெழுத்து இடம்பெற்றுள்ளன. இப்பகுதி மக்கள் கல்வெட்டில் உள்ள திரிசூலத்தை முனியசாமி தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.