உத்தராகண்டில் இன்று தாக்கலாகிறது பொது சிவில் சட்ட மசோதா: சட்டப்பேரவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

டேராடூன்: அனைத்து குடிமக்களும் ஒரேமாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்ட மசோதா உத்தாரண்டில் இன்று (பிப்.6) தாக்கலாகிறது. காலை 11 மணிக்கு அவை கூடியதும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மசோதாவை தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த மசோதாசட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில்சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெறும்.

முன்னதாக, மத்திய அரசு உருவாக்கிய பொது சிவில் சட்டத்தை ஆராய ஐந்துபேர் அடங்கிய உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்து உத்தராகண்ட் முதல்வர் உத்தரவிட்டார். இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை முதல்வரிடம் கடந்த வெள்ளிக்கிழமை அளித்தது. 800 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பலதார மணம் போன்ற நடை முறைகளை தடை செய்வதற்கும், அனைத்து மதத்தினருக்கும் ஒரேமாதிரியான திருமண வயதை நிர்ணயிப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம், விவாகரத்து செய்யும் நடைமுறை தண்டனைக்குரிய குற்றங்களாக அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த வரைவு மசோதாவுக்கு உத்தராகண்ட் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, அந்த மசோதா இன்று உத்தராகண்ட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி உத்தராகண்ட் சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று பொது சிவில் சட்டம் பற்றி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், “பொது சிவில் சட்டம் தேசிய சட்ட ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. தொடர்ந்து அதன் மீது ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது . இதனை மாநிலங்கள் மேம்படுத்தலாம். நடைமுறைப்படுத்தலாம். இதுபற்றி சட்ட ஆணையத்திடம் இருந்து விரைவில் அறிக்கை பெறுவோம். பின்னர் அதுபற்றி உங்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.