‘முந்தைய நாள் இரவு திருப்தியான தாம்பத்திய உறவுகொண்டால், மறுநாள் காலையில் எனர்ஜியாக அலுவலக வேலைகளைப் பார்க்கலாம்’ என்கின்றன ஆய்வுகள். ஆனால், அலுவலகம், வீடு, குழந்தைகள், டெட்லைன், ஸ்ட்ரெஸ் என்று இன்றைய தம்பதிகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தினசரி வாழ்க்கையின் ஸ்ட்ரெஸ் கணவன், மனைவிக்கிடையேயான தாம்பத்திய உறவைக் கொல்லாமல் இருக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.
”முழுமையான செக்ஸ் உடம்பு வலியைக் குறைக்கும், தலைவலியைப் போக்கும். ஆபீஸ்ல ஏதோவொரு பிரச்னைன்னா நம்ம மக்கள் `மூடு இல்ல’ன்னு செக்ஸை அடுத்த நாளுக்குத் தள்ளி வெச்சிடுறாங்க. ஆனா, அன்னிக்கு செக்ஸ் வெச்சுக்கிட்டீங்கன்னா மன அழுத்தம் குறையுறதை நீங்களே அனுபவபூர்வமா தெரிஞ்சுக்க முடியும்.

உடலுறவின் உச்சக்கட்டம் (Orgasm) மனிதர்களுடைய உடலிலும் மனதிலும் செய்கிற மேஜிக்ஸைபத்தி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, ரொம்ப ஆச்சர்யப்படுவீங்க. உச்சக்கட்டம் அடையுறப்போ மூளையிலிருந்து `மார்பின்’ (Morphine) வலிநிவாரணியின் குணத்தையொத்த திரவம் ஒன்று சுரக்கும். உடல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மார்பினைத்தான் பரிந்துரைப்போம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்கும் இதையேதான் தருவோம். `அப்படின்னா உச்சக்கட்டம் வந்தாதான் மார்பின் சுரக்குமா டாக்டர்’னு கேட்கத் தோணலாம். ஆண்களைப் பொறுத்தவரை 99 சதவிகிதம் பேர் உச்சக்கட்டம் அடைந்துவிடுகிறார்கள். பெண்களில் சிலருக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், உறவு கொள்ளும்போது சுரக்கிற மற்ற ஹார்மோன்கள் வலி நிவாரணியாகவும் மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் செயல்பட்டுவிடும். இந்த எஃபெக்ட் அடுத்த ஒரு நாள் வரை இருக்கும்” என்றவர், இதற்கு கணவன் -மனைவி ஃபாலோ செய்ய வேண்டிய வழிகளையும் சொன்னார்.
”படுக்கையறையைப் பொறுத்தவரைக் கணவன் – மனைவி இருவரைத் தவிர வேறு ஒருவர் இருந்தால், அதைக் கூட்டம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் சேர்த்தே சொல்கிறேன். `மகள் முழிச்சிப்பாளோ; மகன் பார்த்திடுவானோ’ என்று பயந்து பயந்து வைத்துக்கொள்ளும் உறவில் உச்சக்கட்டம் அடைவது கடினம்.
அடுத்த பாயின்ட் மிக மிக முக்கியமானது. இரவுகளில் தம்பதியர் ஆடையில்லாமல் படுத்தாலே அது செக்ஸில்தான் முடியும். அணிந்திருக்கும் ஆடை மேல் கை படுவதற்கும், வெதுவெதுப்பான மெத்தென்ற உடலின்மீது கை படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இப்படிப் படுத்தால் இரவிலிருந்து காலைக்குள் ஏதோ ஒரு நேரத்தில் உறவு நிகழ்ந்துவிடும். இது வெரி வெரி பவர்ஃபுல் டெக்னிக். இதில் சிரிப்பதற்கோ, ச்சீய்… என்பதற்கோ ஒன்றுமே இல்லை. ஆராய்ச்சி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழிமுறை இது. நம் நாட்டில் பெரும்பாலானோர் குழந்தைகளுடன் படுப்பதால் இந்த முறையை முயற்சி செய்து பார்ப்பதே இல்லை.

அடிக்கடி உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜலதோஷம், காய்ச்சல் வராது. உறவுகொள்ளும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரப்பதால் தற்கொலை எண்ணம் வராது. வந்தாலும் தடுக்கப்படும். ஸ்ட்ரெஸ் குறையும். ரத்த அழுத்தம் சீராகும். இதனால் 10 வருடங்கள் கூடுதலாக வாழலாம். அதிலும் இளமையாக வாழலாம். ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒரு பங்காகக் குறையும். பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆபத்து குறையும். ஆண்களுக்கு புராஸ்ட்டேட் கேன்சர் ஆபத்து குறையும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.