2024 ஐ.பி.எல். அட்டவணை வெளியானது.. முதல் போட்டியில் சென்னை- பெங்களூரு மோதல்

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதே நேரம் நாடாளுமன்ற தேர்தலும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேதிகள் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 17 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.