சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகன் ஆனேன் – கவுதம் மேனன்

கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நாயகனாக நடித்துள்ள படம் ‛ஜோஸ்வா – இமைபோல் காக்க'. ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

கவுதம் மேனன் அளித்த பேட்டி : ‛‛வருண் சில படங்களில் நடித்திருந்தாலும் நான் அவரை புதுமுகமாகவே பார்த்தேன். முதலில் காதல் படமாக திட்டமிட்டோம். ஆனால் நான் தான் வருணை ஆக்ஷன் ஹீரோவாக பண்ண வைக்க முடியும் என நம்பினேன். எந்த டூப்பும் இல்லாமல் அவரே ஆக்ஷனில் நடித்துள்ளார். இதற்காக மூன்று மாதம் பாரிஸில் பயிற்சி எடுத்தார். கொரோனா காலத்தால் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

பெரிய நடிகர்களுடன் படம் பண்ணும்போது தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருப்பார். எனக்கு புதுமுகங்கள் கொஞ்சம் வசதியாக இருக்கும். அறிமுக நடிகர்கள் பலருடன் வேலை பார்த்துள்ளேன். வருண் நான் என்ன கேட்டாலும் அதை செய்து கொடுப்பார். செருப்பே இல்லாமல் சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார்.

படத்தில் உருகி உருகி காதலிக்கும் காட்சிகள் இருக்காது. இரண்டு மணிநேரம் ஆக்ஷன் தான் இருக்கும். 11 ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. பொதுவாக என் பட தலைப்பு கவிதையாக இருக்கும். இதில் படத்தின் கேரக்டரான ஜோஸ்வா பெயரை வைத்து அதன் உடன் இமைபோல் காக்க என்ற டேக்லைன் இணைத்தோம். ஹீரோயினை பாதுகாக்கும் உயர்தர பாடிகார்டு வேடத்தில் வருண் நடித்துள்ளார். டிடி, கதிர், கிருஷ்ணா நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளனர்.

நான் நடிப்பது என்பது நானாக தேர்ந்தெடுக்கவில்லை. அதுவாக அமைந்தது. கண்ணாடி முன்னாடி என் முகம் பார்த்து நடிகனாக என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகர் ஆனேன். நிறைய பட வாய்ப்பு வருகிறது. இப்போது எந்த படமும் ஒப்புக்கொள்ளவில்லை. எடிட்டிங், டப்பிங் என்று இயக்குனருக்கான வேலையே சரியாக இருக்கிறது'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.