தமிழ் அலுவல் மொழி விவகாரத்தில் தலையிட முடியாது: அரசிடம் முறையிட உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மற்றும் வழக்காடும் மொழியாக்கக்கோரி வழக்கறிஞர் பகவத்சிங் தலைமையில் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் என 24 பேர் கடந்த பிப்.28-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.

வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக வழக்கறிஞர் அணி செய்தி தொடர்பாளருமான கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

அப்போது வழக்கறிஞர் கே.பாலு, தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. அதில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

அதையடுத்து தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் உண்ணாவிரதம் மற்றும் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், இதில் சட்ட ரீதியாக தங்களால் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுதான் தகுந்த முடிவை எடுக்க முடியும், என கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகரிடமும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.