‘அரசியலமைப்பு சட்டம்’ பற்றி பேசிய பாஜக எம்.பி. அனந்த்குமாருக்கு சீட் இல்லை!

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்நாடக பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டேவுக்கு சீட் வழங்காமல், வேட்பாளரை மாற்றிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி பாஜக எம்.பி.அனந்த்குமார் ஹெக்டே அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி செய்திகளில் அடிபடுவார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் 6 முறை நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என பேசியுள்ளார்.

இவர் அண்மையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தவுடன் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும்” என பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேர்தல் நெருங்கும் வேளையில் அனந்த்குமார் ஹெக்டேவின் இந்தப் பேச்சு பாஜக மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவருக்கு மீண்டும் உத்தர கன்னடா தொகுதியில் பாஜக மேலிடம் சீட் வழங்கவில்லை.

அவருக்கு பதிலாக கர்நாடக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர் 6 முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பதால், உத்தர கன்னடா தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். அதனால் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.