ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்; ஜெலன்ஸ்கிக்கு உறுதியளித்த டிரம்ப்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கேட்டு, பேசி வருகிறார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டனர். இதுபற்றி டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், நானும் தொலைபேசி வழியே இன்று பேசி கொண்டோம். எங்களுடைய உரையாடல் நன்றாக இருந்தது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, எனக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். என்னை தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியை நான் பாராட்டுகிறேன். அடுத்த அமெரிக்க அதிபராக, உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன்.

பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இந்த பேச்சின்போது, டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்து கொண்டார் என்றும் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.

இதேபோன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன். பென்சில்வேனியாவில் நடந்த அதிர்ச்சிகர கொலை முயற்சிக்கு கண்டனமும் தெரிவித்தேன் என பதிவிட்டு உள்ளார்.

ரஷிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியதற்காக, அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.