புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
‘உலகை கவலையடையச் செய்வது எது?’ எனும் தலைப்பில் கடந்த மே மாதம் தாங்கள் நடத்திய கணக்கெடுப்பு குறித்த தகவல்களை ‘இப்ஸோஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தேசிய அளவில் இந்திய அரசின் மீதான நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய பதிப்பில், தேசிய அளவிலான நம்பிக்கை 62% ஆக இருந்த நிலையில், மே 2025ல் அது 3 புள்ளிகள் அதிகரித்து 65% ஆக உயர்ந்துள்ளது.
நம்பிக்கை குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தொட்ர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மே மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’-க்குப் பிறகு தேசிய அளவில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட இந்தியர்களில் 65 சதவீதம் பேர் நாடு சரியான திசையில் செல்கிறது என்று நம்புகிறார்கள். இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சராசரி 37 சதவீதமாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில் அவநம்பிக்கை நிலவுகிறது. பிரான்ஸ், தென் கொரியா மற்றும் பெரு ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன.
மே 7 அதிகாலையில் ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்பட்டவுடன் இந்தியாவில் திடீரென நம்பிக்கை அதிகரித்தது. சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்திய ராணுவ நடவடிக்கை மூலம் ஒன்பது பயங்கரவாத தளங்களில் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய நபர்களும், அவர்களின் கட்டமைப்புகளும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டன.
பயங்கரவாதம் ஒரு கவலை: பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பயங்கரவாதம் குறித்த பொதுமக்களின் கவலை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை தேசிய கவலையின் முக்கிய பிரச்சினையாகக் குறிப்பிட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 11 புள்ளிகள் அதிகரித்து, 26 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது அக்டோபர் 2019-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவாகும்.
பணவீக்கம் (37 சதவீதம்) மற்றும் வேலையின்மை (33 சதவீதம்) ஆகியவற்றுக்குப் பின்னால் இந்தியாவின் மூன்றாவது பெரிய கவலையாக பயங்கரவாதம் உள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையின்மை கவலைகள், முந்தைய பதிவோடு ஒப்பிடுகையில் தலா 2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய தெற்கில் நம்பிக்கை: உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் நம்பிக்கையை அதிக அளவில் கொண்டுள்ளன. சிங்கப்பூர் 77 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து மலேசியா (69 சதவீதம்), இந்தோனேசியா (67 சதவீதம்) மற்றும் இந்தியா (65 சதவீதம்) உள்ளன. அர்ஜென்டினா (56 சதவீதம்), தாய்லாந்து (45 சதவீதம்), மெக்சிகோ (45 சதவீதம்) ஆகியவை முதல் ஏழு இடங்களைப் பிடித்துள்ளன.
மாறாக, பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. 19 சதவீதம் மட்டுமே தங்கள் நாடு சரியான பாதையில் செல்வதாக பிரான்ஸ் மக்கள் கூறுகிறார்கள். தென் கொரியா (15 சதவீதம்) மற்றும் பெரு (9 சதவீதம்) என்பதாக நம்பிக்கை அளவைப் பதிவு செய்துள்ளன.