இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற்றிபெற்று கிரீடம் சூடியிருக்கிறார்.
Hitex Exhibition Centre-ல் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி ஷில்லர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2016-ல் உலக அழகி பட்டம் வென்ற ஸ்டெஃபனி டெல் வாலே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நடுவர் குழுவில் நடிகர் சோனு சூட், 2025-ம் ஆண்டுக்கான அழகுக்கான உலகளாவிய தூதர் சுதா ரெட்டி, 2014-ல் மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார மருத்துவருமான டாக்டர் கரினா டர்ரெல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நடுவர் குழுவுக்கு ஜூலியா மோர்லி தலைமை தாங்கினார். மேலும், அழகிப் பட்டம் வெல்பவருக்கு கிரீடம் சூட்டுவதற்காக கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 108 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், 2025-ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தாவும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றார்.
டாப் 40 இடங்கள், டாப் 18 இடங்கள் என அடுத்தடுத்து சுற்றுகளுக்கு முன்னேறிய நந்தினி குப்தாவால் டாப் 8 சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை.
இறுதிச் சுற்றில் போலந்து நாட்டின் மாஜா கிளாஜ்டா இரண்டாவது ரன்னர்-அப் (3-வது இடம்) ஆகவும், எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த ஆசட் டெரஜியும் முதல் ரன்னர்-அப் (2-வது இடம்) ஆகவும் வர, தாய்லாந்து நாட்டத்தைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி முதலிடம் பிடித்து 2025-ம் ஆண்டின் உலக அழகியானார்.
வெள்ளை நிற ஆடையில் பளிங்கு போல் ஜொலித்த இவருக்கு, 2024-ல் உலக அழகி பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் தாய்லாந்து நாட்டிலிருந்து உலக அழகிப் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி படைத்திருக்கிறார்.

யார் இந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி?
சர்வ்தேச உறவுகள் (International Relations) பிரிவில் கல்லூரி பயின்று வரும் இவர், கூடவே மாடலிங் செய்துவருகிறார்.
தன்னுடைய 16 வயதில் தனது மார்பில் தீங்கற்ற புற்றுநோய்க் கட்டி கண்டுபிடித்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி, தற்போது மார்பக புற்றுநோய் குறித்தும், அதைத் தொடக்கத்திலேயே எப்படிக் கண்டறிவது குறித்தும் மக்களிடத்தில் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருபவராகச் சுழல்கிறார்.