ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ஷகூர் கான், முக்கியமான ஆவணங்களை ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுக்கு அனுப்பிய புகாரில் கைதாகியுள்ளார்
ஜெய்சால்மரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஷகூர் கான் என்பவரை, உளவு பார்த்த கடுமையான குற்றச்சாட்டில் ராஜஸ்தான் உளவுத் துறை கைது செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முகவர்களுடன் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் காவல் துறைத் தலைவர் (சிஐடி) விஷ்ணு காந்த் குப்தா, ஷகூர் கான் நீண்ட காலமாக கண்காணிப்பில் இருந்ததை உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர், “கண்காணிப்பின்போது, பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் சில நபர்களுடன், குறிப்பாக அஹ்சன்-உர்-ரஹீம் என்கிற டேனிஷ் மற்றும் சோஹைல் கமர் ஆகியோருடன் ஷகூர் கான் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. டேனிஷ் ஏற்கெனவே இந்திய அரசாங்கத்தால் ‘விரும்பத்தகாத நபர்’ என்று அறிவிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் மேலும் கூறினார்.
ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ஷகூர் கான் பல முறை பாகிஸ்தானுக்குச் சென்று டேனிஷ் உதவியுடன் விசா பெற்றதாக ஒப்புக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்தபோது, அவர் ஐஎஸ்ஐ முகவர்களை சந்தித்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் இந்தியா திரும்பியதும், மூலோபாய தகவல்களைச் சேகரித்து, வாட்ஸ்அப் போன்ற தளங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் முகவர்களுக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ஷகூர் கான் மீது, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.