RCB: 'கோப்பையை வென்றுகொடுத்த 3 ஓவர்கள்' – என்னென்ன தெரியுமா?

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அசத்தியிருக்கிறது பெங்களூரு அணி.

ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஆர்சிபி அணிக்கும் கோலிக்கும் 18 ஆண்டுகால ஏக்கம். அந்த ஏக்கத்தையும் கனவையும் நிறைவேற்றிக்கொள்ள 3 ஓவர்கள்தான் காரணமாக இருந்தன. அந்த 3 ஓவர்கள்தான் ஆட்டத்தையே மாற்றியது.

RCB vs PBKS
RCB vs PBKS

முதலில் ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய அந்த 10 வது ஓவர். ஷெப்பர்ட் அவ்வளவு சிறந்த பௌலரெல்லாம் இல்லை. சில ஓவர்களை அவரை வைத்து கடத்த முடியும்.

ஆனால், இந்தப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் அவருக்கு ஓவரை கொடுத்தார் ரஜத் பட்டிதர். 9 வது ஓவரில் க்ரூணால் பாண்ட்யா பிரப்சிம்ரனின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

அடுத்த ஓவரில் சுயாஷூக்கு கொடுத்து இன்னும் அழுத்தம் ஏற்றுவார்கள் என நினைக்கையில் ஷெப்பர்ட்டின் கைக்கு பந்து சென்றது. இது மிகப்பெரிய கேம்பிள். அந்த சமயத்தில் இங்லிஷ் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் அப்போதுதான் வந்து செட்டில் ஆக காத்திருந்தார். எதிர்பார்த்ததை போலவே முதலில் ஒரு பவுண்டரியை கொடுத்தார் ஷெப்பர்ட். பவுண்டரி அடித்துவிட்டு இங்லிஷ் சிங்கிள் தட்டி மறுமுனைக்கு செல்ல, ஸ்ரேயஸ் ஸ்ட்ரைக்குக்கு வந்தார்.

ஷெப்பர்ட் 5 வது ஸ்டம்ப் லைனில் நல்ல லெந்த்தில் ஒரு பந்தை வீச ஸ்ரேயஸ் பேட்டை விட்டு எட்ஜ் ஆகி அவுட். போட்டியின் திருப்புமுனையே இதுதான்.

RCB vs PBKS
RCB vs PBKS

ஸ்ரேயஸ் ஐயர் கடந்த போட்டியில்தான் Captain’s Knock ஆடி இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் வரைக்கும் பஞ்சாப் அணியின் நம்பிக்கையை உடைக்கவே முடியாது.

அதனால்தான் அது ஆட்டத்தின் திருப்புமுனை. ஸ்ரேயஸூக்கு பிறகும் பஞ்சாப் அணியில் அடிப்பதற்கு வீரர்கள் இருந்தார்கள். ஆனால், அந்த திடகாத்திரமான நம்பிக்கை போய்விட்டது.

அடுத்ததாக க்ரூணால் பாண்ட்யா வீசிய அந்த 13 வது ஓவர். இந்த ஓவரில்தான் ஜாஸ் இங்லிஸ் அவுட் ஆகியிருந்தார். க்ரூணால் பாண்ட்யா ஏற்கனவே பிரப்சிம்ரன் சிங்கை வீழ்த்தியிருந்தார்.

அதுவுமே ஆட்டத்தின் முக்கியமான விக்கெட்தான். ஆனால், அதைவிட இங்லிஸை வீழ்த்திய இந்த ஓவர்தான் முக்கியமானது. நேஹல் வதேரா ஒரு பக்கம் தடுமாறிக் கொண்டிருக்க இங்லிஸ் மட்டும்தான் பேட்டை வீசிக்கொண்டிருந்தார்.

அவரை வீழ்த்த க்ரூணால் டைட்டாக வீச பெரிய ஷாட்டுக்கு முயன்று லாங் ஆனில் பவுண்டரி லைனில் இங்லிஸ் கேட்ச் ஆகியிருந்தார்.

RCB vs PBKS
RCB vs PBKS

பவுண்டரி லைனை ஒட்டி நின்று பேலன்ஸ் தவறாமல் லிவிங்ஸ்டன் சிறப்பாக கேட்ச்சும் செய்திருந்தார். ‘பந்தை மெதுவாக வீசினால் பேட்டர்கள் திணறுகிறார்கள் என்பதை இன்னிங்ஸ் ப்ரேக்கின் போதே உணர்ந்துவிட்டேன்.’ என க்ரூணால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு பேசியிருந்தார்.

இந்தப் போட்டி என்றில்லை. இந்த சீசன் முழுவதுமே க்ரூணால் பாண்ட்யா ஆகச்சிறந்த செயல்பாட்டையே கொடுத்திருக்கிறார்.

அடுத்ததாக அந்த 17 வது ஓவர். புவனேஷ்வர் குமார் வீசியிருந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டுக்கொண்டே இருந்ததால் பஞ்சாபின் மீது கடும் அழுத்தம் ஏறியிருந்தது.

ஆனாலும் ஹார்ட் ஹிட்டர்கள் இருந்துகொண்டே இருந்தனர். இந்த ஓவரில்தான் புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்து கொடுத்தார்.

RCB vs PBKS
RCB vs PBKS

ஒன்று தடுமாறிக் கொண்டிருந்த நேஹல் வதேராவின் விக்கெட். இன்னொன்று க்ரீஸூக்குள் வந்தவுடனேயே சிக்சர் அடித்த ஸ்டாய்னிஸின் விக்கெட்.

இந்த ஓவர்தான் பெங்களூரு அணியை வெற்றி கொண்டாட்டத்துக்குத் தயாராக வைத்தது.

கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அந்த அணியின் நீண்ட கால கனவு. அதை நிறைவேற்றி வைத்தது இந்த ஓவர்கள்தான்.

RCB அணி வெல்வதற்குக் காரணமென நீங்கள் நினைப்பது எது என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.