‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 முடிவடைந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டிலை திவினேஷ் தட்டிச் சென்றிருக்கிறார்.
திவினேஷைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த 6 நபர்களில் அபினேஷையும், ஶ்ரீமதியையும் சந்தித்துப் பேசினோம்.

ஶ்ரீ மதி, ஏற்கெனவே சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வளவு பரிச்சயம். இவரும் இவருடைய சகோதரியும் இணைந்து பாடும் பாடல்களுக்கு அப்போது பெரிதளவில் வரவேற்பு கிடைத்தது.
சொல்லப்போனால், ஏ.ஆர். ரஹ்மானே இவர்களுடைய காணொளியை ஷேர் செய்திருக்கிறார்.
அபினேஷ் பேசுகையில், “நான் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் செட்டை ரொம்ப மிஸ் பண்றேன். பைனல் முடிஞ்சதும் அடுத்த நாள் எந்தப் பாடலைத் தேர்ந்தெடுக்கலாம்ங்கிற விஷயம்தான் நினைவுக்கு வருது.
நான் சும்மா வீட்டுல ஹம் பண்ணுவேன். அப்போ என்னுடைய குரல் நல்லா இருக்குனு என்னுடைய அம்மா என்னைப் பாட்டு க்ளாஸில் சேர்த்துவிட்டாங்க.
சொல்லப்போனால், எனக்கு பாடணும்ங்கிற ஆசை என் பாட்டி கிட்ட இருந்துதான் வந்தது. ஜட்ஜஸ் எப்போதுமே என்னை ஊக்கப்படுத்துவாங்க.

நான் ஒரு வாரம் சரியாகப் பாடலைனாலும், அடுத்த வாரம் சரியாகப் பாடுறதுக்கு எனக்கு ஊக்கத்தைக் கொடுப்பாங்க.
எஸ்.பி.பி. சரண் என்னுடைய குரலுக்கு செட் ஆகுற மாதிரியான பாடல்களைப் பரிந்துரைப்பாரு. ஒரு ப்ரண்ட் மாதிரி எஸ்.பி.பி. சரண் சார் ஜாலியாக இருப்பாரு.
முக்கியமாக, ஸ்வேதா மோகன் மேம்கூட நான் சேர்ந்து பாடின மொமன்ட் ஜாலியாக இருந்தது,” என்றவர், “எனக்கு ரஹ்மான் சாருடைய 90ஸ் பாடல்களெல்லாம் ரொம்ப பிடிக்கும்.
இப்போ பைனல்ஸுக்கு முன்னாடி தேவா சார் பாராட்டியிருந்தார். அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த கீபோர்டை நான் பொக்கிஷமாக வச்சிருக்கேன்.
அந்த கீபோர்ட் வச்சு நான் மியூசிக் டைரக்டராகணும் வாழ்த்தினாரு. அவருடைய கையெழுத்து என் தலையெழுத்தை மாத்தும்னு நம்புறேன்.” என்று பேசினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய ஶ்ரீமதி, “சின்ன வயசுல என்னுடைய அக்கா ஶ்ரீசக்தி பாடிக்கிட்டே இருப்பா. அவளைப் பாடுறதுக்கு பல இடங்களுக்கும் கூப்பிட்டு போவாங்க.
அப்போ சிங்கிங் மேல ஆர்வம் வந்து என் அக்காகிட்டதான் பாடுறதுக்கு கத்துக்கிட்டேன். அங்க இருந்து தொடங்கின பயணம், சூப்பர் சிங்கர், ‘சரிகமப’ நிகழ்ச்சினு போயிட்டு இருக்கு.
என்னுடைய பெற்றோர்கள் சமூக விழிப்புணர்வோட பாடல்களைப் பாடணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க.

அப்படி நாங்க சமூக கருத்துகளை முன் வச்சு ஒரு பாடலைப் பாடியிருந்தோம். அதைக் கூட ஏ.ஆர். ரஹ்மான் சார் அப்போ அவருடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் பண்ணியிருந்தார்.
அதையெல்லாம் மறக்கவே முடியாது. இங்க நிகழ்ச்சியில் நான் பாடின பிறகு ஶ்ரீனிவாஸ் சார், ‘நீ இங்க வராத, நீ கான்சர்ட்டில் போய் பாடுற சிங்கர் மாதிரி’னு சொல்லிப் பாராட்டுவாங்க.
நான் பாடும்போது என்னுடைய ஃபேனாக அவர் மாறிடுவார்னு சொல்ற வார்த்தையெல்லாம் எனக்கு மிகப் பெரிய பாராட்டுகள்.
அதுபோல, இன்னும் நல்லா பாடுறதுக்கு பயிற்சிகள் எடுத்துக்கவும் அவர் சொல்லிக் கொடுப்பாரு. இதைத் தாண்டி, நான் ‘பொம்மை நாயகி’ படத்திலும் நடிச்சிருக்கேன்.
அங்க செட்ல இயக்குநருக்கு வச்சிருக்கிற மைக்ல நான் எப்போதும் பாடிட்டுதான் இருப்பேன். யோகி பாபு அங்கிளும் அதை ரசிச்சு கேட்பாரு.
எனக்கு யோகி பாபு அங்கிளையும் ரொம்ப பிடிக்கும். இப்போ சமீபத்தில் நடந்திருந்த ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடலின் ஒரு கோரஸை நாங்க பாடினோம்.

அப்போ ரஹ்மான் சாரை நேரில் பார்த்தோம். ஆனா, பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்கலை.
என்னுடைய அக்கா ஶ்ரீசக்தி அவர்கிட்ட பேசினா. எங்களுடைய வீடியோவை அவர் ஷேர் பண்ணியிருந்தார்னு நான் சொன்னேன்ல, அதை நினைவு வச்சு அக்காகிட்ட பேசியிருக்கார். அந்த நினைவு வச்சு கேட்டதே எனக்கு பெரிய விஷயம்.” என்றார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.