Telangana Controversy: சர்ச்சையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கருத்து; NCSC முன் வந்து நடவடிக்கை!

தெலங்கானா மாநிலத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலகு வர்ஷினி, குருகுல பள்ளிகளில் பயிலும் பட்டியல் சமூக மாணவர்கள் குறித்து இழிவாகப் பேசியிருந்தது கடந்த வாரம் சர்ச்சையாகியிருந்தது.

NCSC
NCSC

இந்த விவகாரத்தில் தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் (NCSC) தெலங்கானா மாநிலத்தின் தலைமைச் செயலாளரிடமும், டி.ஜி.பி-யிடமும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையைக் (ATR) கோரியிருக்கிறது.

தெலங்கானா சமூக நல குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (TGSWREIS) செயலாளராகப் பணியாற்றும் அலகு வர்ஷினி, பட்டியல் சாதி மாணவர்கள் குறித்து இழிவாகப் பேசிய ஆடியோ வைரலானது.

அந்த ஆடியோவில், அவர் சமூக நலப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுதி அறைகளையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளை ஒப்படைக்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

Alagu Varshini IAS
Alagu Varshini IAS

அலகு வர்ஷினியின் செயலுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தெலங்கானா மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த அதிகாரியைக் குற்றம் சாட்டியிருந்தனர்.

அலகு வர்ஷினி தற்போது செயலாளராக இருக்கும் அமைப்பின் முன்னாள் செயலாளரும், பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவருமான ஆர்.எஸ். பிரவீன் குமார் அலகு வர்ஷினியைக் கண்டித்திருக்கிறார்.

இந்த BRS கட்சியின் எம்.எல்.சி கல்வகுண்டல கவிதா, “முந்தைய BRS ஆட்சியில் ஒவ்வொரு சமூக நலப் பள்ளிக்கும் மாதம் 40,000 ரூபாய் சுத்தம் செய்யும் பணியாளர்களை நியமிக்க ஒதுக்கப்பட்டிருந்த நிதி, இந்த ஆண்டு மே மாதம் முதல் காங்கிரஸ் தலைமையிலான அரசால் நிறுத்தப்பட்டுள்ளது.

240 பள்ளிகளில் உதவி காப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் வார்டன்கள் மற்றும் சமையலறை உதவியாளர்களாகப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இப்போது இந்த அதிகாரி மாணவர்களைக் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வற்புறுத்துகிறார். இது குழந்தைகளின் உரிமைகளை மீறுவதோடு, சாதி மற்றும் வர்க்க பாகுபாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட குருகுல நிறுவனங்களின் நோக்கத்தையே குலைக்கிறது,” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

Kalvakuntala Kavitha MLC
Kalvakuntala Kavitha MLC

இப்படியான சர்ச்சைகளுக்குப் பிறகும், மாணவர்கள் தினசரி பணிகளில் உதவுவது முழுமையான வளர்ச்சியின் ஒரு பகுதி என்று வர்ஷினி வாதிட்டார்.

இந்த விவகாரம் குறித்து பெரிதளவில் பேசப்பட்ட நிலையில், தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக அறிந்து கொண்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.