பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முறையான திட்டமிடல் இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.

அதேசமயம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஆர்.சி.பி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்ச்சி செய்த கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேசன் (KSCA) மற்றும் ஆர்.சி.பி நிர்வாகம் இணைந்து இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “இன்றைய நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்களால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்திருக்கிறோம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருக்கின்றன.
இந்தத் துயர சம்பவத்துக்கு நாங்கள் மனதார வருந்துகிறோம். மேலும், இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம்.

தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆர்.சி.பி மற்றும் கே.எஸ்.சி.ஏ இணைந்து தலா 5 லட்சம் நிதியுதவி அளிக்கும்.
இது அவர்களின் இந்த துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆதரவையும், ஆறுதலையும் அளிக்கும் என்று நம்புகிறோம்.
இந்த இழப்பீடு மனித உயிரை மதிப்பைத் தீர்மானிக்கவோ அல்லது மாற்றவோ அல்ல. மாறாக இதுபோன்ற கடினமான நேரங்களில் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாகச் செயல்படுவதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். உங்களின் புரிதலுக்கு ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.