சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கல்ட் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் இன்றும் அத்திரைப்படத்தை டீகோட் செய்து பலர் பேசுகிறார்கள்.

சுப்ரமணியபுரம் திரைப்படம் சினிமாவில் நமக்கு பெரிதளவில் பரிச்சயமில்லாத நடிகர்களையும் நடிக்க வைத்து நமக்கு நெருக்கமாக்கியிருப்பார் சசிகுமார்.
அப்படி டும்கான், சித்தன், மொக்கைச்சாமி ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் நமக்கு நினைவில் இருக்கும் வகையில் அமைத்திருப்பார்.
இதில் மொக்கைச்சாமி என்பவரின் உண்மையான பெயர் முருகன். மதுரை மக்களுக்கு இவர் இலைக்கடை முருகனாக பரிச்சயம்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியின் மார்க்கெட்டில் இலைக்கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார் இவர். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 படங்களில் நடித்திருக்கிறார் முருகன்.

இப்படங்களுக்குப் பின்னர் மீண்டும் இலைக்கடையையே இவர் பார்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மொக்கைச்சாமியாக இன்றும் நம்மிடையே பரிச்சயமாக இருக்கும் முருகன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 78.