ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் – எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன ட்ரோன்கள். இவற்றை உள்நாட்டு ஆகாஷ் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின. இதனால் இந்திய ராணுவத்தில் தரையிலிருந்து வான் இலக்குகளை தகர்க்கும் படைப்பிரிவுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.30,000 கோடி மதிப்பில் க்யூஆர்-எஸ்ஏஎம் என்ற அதிவிரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை யூனிட்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை 25 கி.மீ முதல் 30. கி.மீ தூரத்தில் சுட்டு வீழ்த்தும். இந்த ஏவுகணைகளை பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்த ஏவுகணைகளை டிஆர்டிஓ ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெறும். அப்போது க்யூஆர் – எஸ்ஏஎம் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

எஸ்​-400, ஆகாஷ் ஏவுகணைகள்: இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையிடம் ஏற்கெனவே எஸ்-400, ஆகாஷ், பராக்-8, இக்லா மற்றும் எல்-70 என்ற வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளன. அவற்றுடன் க்யூஆர்- எஸ்ஏஎம் ஏவுகணை யூனிட்கள் இணையும்போது, நாட்டின் வான் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 6 கி.மீ தொலைவில் தாக்குதல் நடத்தும் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை, 350 கி.மீ சென்று தாக்கும் தொலை தூர ஏவுகணையை குஷா திட்டத்தின் கீழ் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றை 2028-29-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.