அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், இந்த விமானம் விபத்துக்குள்ளான பிரத்யேக சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. இந்த விமான விபத்தை அடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், சிஆர்பிஎஃப், கடலோர படை மற்றும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்தது என்ன? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 600+ அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது. விமானம் விழுந்த இடம் பி.ஜி மருத்துவக் கல்லூரி வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அங்கிருந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூப்வானி உட்பட சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதை குஜராத் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்குவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.
The entire sequence of Air India Flight 171from takeoff to the crash was captured on CCTV.
The footage shows a clear and sudden loss of lift just seconds after the aircraft left the ground. pic.twitter.com/M04DIYu7Wg
— IndiaWarMonitor (@IndiaWarMonitor) June 12, 2025