பாட்னா,
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறும். சமீப காலமாக தாலிகட்டும் வேளையில் திருமணங்கள் நின்றுபோவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவு சரியில்லை, மணமகன், மணமகளின் ஆடை அலங்காரம் சரியில்லை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி கூட திருமணங்கள் தடைப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தான் தற்போது திருமணவிழாவில் மணமகளுக்கு குங்கும் வைக்கும்போது கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் கைமோர் மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில், மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அங்கு உறவினர்கள் ஒன்றாக கூடியிருந்தனர். அப்போது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுங்கியது. இதை பார்த்த மணமகள் கை ஏன் இப்படி நடு நடுங்குகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு மாப்பிள்ளை தரப்பில் உடனடியாக யாரும் பதில் அளிக்கவில்லை. பதற்றம் காரணமாகவே கைநடுங்கி இருக்கலாம் என மாப்பிள்ளை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும் அவர் மறுத்துவிட்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி, திருமணத்தை நடத்த முயற்சித்துள்ளனர். இருப்பினும் மணமகளின் பிடிவாதத்தால் அதுவும் தோல்வியடைந்தது. மேலும், மணமகன் உடல்நிலை சரியில்லை என்று மணப்பெண் குற்றம் சாட்டி, அவரை பைத்தியம் என விமர்சித்துள்ளார். இதனையடுத்து திருமணம் நின்றது. இறுதிவரை மணப்பெண் உறுதியாக இருந்ததால், திருமணம் பாதியிலேயே நின்றுபோனது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.