கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.
மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.
அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைக்கதைக்கான விருதை நித்திலன் சுவாமிநாதன் பெற்றார். இந்த விருதினை நடிகர் ராம்கி வழங்கினார்.
விருதை வழங்கிய ராம்கி பேசுகையில், “சினிமாத்துறையில் ஆனந்த விகடன் விருது ஒரு மதிப்பு மிக்க விருது. மகாராஜா திரைப்படத்தை இந்த சினிமா துறையின் வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். மகாராஜா என்ற படம் தமிழைத் தாண்டி இந்திய அளவில், சர்வதேச அளவில் பெரிய வெற்றியை கொண்டு வந்திருக்கிறீர்கள். இப்போது வருகின்ற இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு பெரிய ஊக்கம்.” என்று கூறினார்.
இந்த விருதை அண்ணன் சிங்கம் புலிக்கு சமர்ப்பிக்கிறேன்
விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய நித்திலன் சுவாமிநாதன், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வெற்றிமாறன் சார் அடிக்கடி சொல்லுவார் பாலு மகேந்திரன் சார் சொன்னத. ஒரு படத்தோட வெற்றி அதுவாகவே தேடிக் கொள்ளும் என்று. இந்த வெற்றியும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. இந்த படத்துல இருந்த எல்லாருக்கும் நன்றி. இந்த விருதை அண்ணன் சிங்கம் புலிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு அவர் தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் மேடையில் பரிசளிக்கப்பட்டது.
அப்போது மேடையில் கண்ணீர் சிந்திய நித்திலன், “எங்க அப்பா இறந்துட்டாரு. ரொம்ப சந்தோஷம். விஸ்காம் படிக்கும்போது சண்டை போட்டு கேமரா வாங்குனேன். ஆனா எங்க அப்பாவ நான் போட்டோ எடுத்ததே இல்லை. அது எனக்கு ஒரு மாதிரி அவமானமாகவும், உறுத்தலாகவும் இருந்து கொண்டே இருக்கும். யு மேட் மை டே.” என்று கூறினார்.