பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது

நிகோசியா (சைப்ரஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “‘மாக்காரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை எனக்கு வழங்கியதற்காக சைப்ரஸ் அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மரியாதை அல்ல. இது 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த மரியாதை. இந்த விருதை இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையிலான நட்புக்கு அர்ப்பணிக்கிறேன். சிறந்த உலகை உருவாக்க நமது நாடுகள் ஒன்றாகபங்களிக்கும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, “கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக மாற்றமடைந்துள்ளது. எதிர்கால தலைமுறையினர் பயனடையும் வகையில் சீர்திருத்தங்கள், கொள்கைகள், நிலையான அரசியல் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

புத்தாக்க கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் புரட்சி, உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, துறைமுகம், கப்பல் கட்டுதல், டிஜிட்டல் பணப்பரிமாற்றம், பசுமை மேம்பாடு போன்ற துறைகளில் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் உள்ள திறன்வாய்ந்த தொழிலாளர்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல்சார் அமைப்பு போன்றவை வலுவான நிலையில் உள்ளன. மேலும் செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி, குவாண்டம் தொழில்நுட்பம், செமிகண்டக்டர், தாதுக்கள் போன்ற துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்நிய நேரடி முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. சைப்ரஸ் இந்தியாவின் மிகமுக்கியமான பொருளாதார நட்பு நாடாக உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சைப்ரஸ் தொழில் நிறுவனங்களை அழைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

சைப்ரஸ் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகி வரும் நிலையில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதென இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்புக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று இருதலைவர்களும் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.