புதுடெல்லி: சிந்து நதிகளின் நீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இதற்காக 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்க முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன.
இந்த நதி கட்டமைப்பு நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த 1960-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி கிழக்கு பகுதியில் பாயும் ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 3 நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் பலன் அடைகின்றன. மேற்கு பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.
இதேபோல சிந்து, ஜீலம் நதிகளின் நீரும் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக காஷ்மீரின் சாவல்கோட், கிர்தாய், பகல் துல், ராட்லி, கிரு, கவார் ஆகிய 6 இடங்களில் புதிதாக அணைகள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் சிந்து நதிகளின் நீரை ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு திருப்ப மத்திய அரசு விரிவான திட்டத்தை தீட்டி உள்ளது.
இதற்காக காஷ்மீரில் இருந்து ராஜஸ்தான் வரை 113 கி.மீ. தொலைவுக்கு மிகப் பெரிய கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முதல்கட்ட ஆய்வு தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சிந்து நதி கட்டமைப்பில் 100 சதவீதம் நீரையும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இதற்காக தற்போது பயன்பாட்டில் உள்ள 13 கால்வாய்களின் நீளம் அதிகரிக்கப்பட உள்ளது. காஷ்மீரில் இருந்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு புதிதாக கால்வாய் கட்டப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ராஜஸ்தானின் கடைநிலை பகுதி வரை சிந்து நதி நீர் சென்றடையும்.
இதன்மூலம் இமாச்சல பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயம் செழித்தோங்கும். புதிதாக அணைகள் கட்டப்பட்டு, நீர் மின் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி கட்டமைப்பை மட்டுமே நம்பியிருக்கிறது.
இந்தியா தண்ணீரை நிறுத்தினால் அந்த நாடு படிப்படியாக பாலைவனமாக மாறும். பாகிஸ்தானின் நீர் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு மின் உற்பத்தி சிந்து நதிகளை சார்ந்து உள்ளன. இதனால் பாகிஸ்தானின் மின் உற்பத்தியும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.
சிந்து நதிகளில் தண்ணீரை திறந்துவிடக்கோரி பாகிஸ்தான் அரசு தரப்பில் ஏற்கெனவே 4 கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அந்த நாடு சார்பில் உலக வங்கியின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் உலக வங்கி தலையிடாது என்று அதன் தலைவர் அஜய் பங்கா கூறியுள்ளார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.