அட்லாண்டா,
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.
நேற்று முன்தினம் 3 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி.யை (அமெரிக்கா) தோற்கடித்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிளமென்கோ அணி (பிரேசில்) 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்பெரன்ஸ் டி துனிஸ் அணியை (துனிசியா) வீழ்த்தியது.
‘சி’ பிரிவில் போகா ஜூனியர்ஸ் (அர்ஜென்டினா)-பென்பிகா (போர்ச்சுகல்) இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போகா ஜூனியர்ஸ் தரப்பில் மிகுல் மெரென்டியல், ரோட்ரிகோ பட்டாக்லியா கோல் அடித்தனர். பென்பிகா அணியில் ஏஞ்சல் டி மரியா, நிக்கோலஸ் ஒடாமன்டி பதில் கோல் திருப்பினர்.