ஐபிஎல்-க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு!

ஐபிஎல் தொடரில் தற்போது பத்து அணிகள் விளையாடி வருகின்றனர். கடந்த 2022 மெகா ஏலத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது. இதற்கு முன்பும் ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஒரு சில அணிகள் புதிதாக இணைந்து பிறகு காணாமல் போய் உள்ளன. அப்படி ஒரு அணி தான் கொச்சி டர்க்கர்ஸ். 2010 ஆம் ஆண்டு இந்த கொச்சி டர்க்கர்ஸ் அணி ஐபிஎல்லில் விளையாடியது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பிசிசிஐ இந்த அணிக்கு தடை விதித்தது. பிசிசிஐ தரப்பிலிருந்து ரூபாய் 153 கோடி வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் இது ஒருதலை பட்சமாக இருப்பதால் எங்கள் தர முடியாது என்று கொச்சி டர்க்கர்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிங்க: 2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?

இதனால் பிசிசிஐ விதிகளை மீறியதாக கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு 2011 ஆம் ஆண்டு தடை விதித்தது. ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் என்ற நிறுவனம் தான் கொச்சி டர்க்கர்ஸ் அணியை நடத்தி வந்தது. பிசிசிஐயின் இந்த அடாவடி போக்கை எதிர்த்து 2012ம் ஆண்டு கொச்சி டர்க்கர்ஸ் அணி நடுவர் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை முடிவில், பிசிசிஐ ரூபாய் 384 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சக்தி வாய்ந்த இடத்தில் இருந்த பிசிசிஐ அதனை தர மறுத்தது. 

எங்கள் அணியை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும், உங்கள் இழப்பீடு வேண்டாம் என்றும் அணியின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனையும் பிசிசிஐ நிராகரித்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலான தொடர் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி, பிசிசிஐ கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு ரூபாய் 538 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிசிசிஐக்கு பெரும் அடியாகவே பார்க்கப்படுகிறது. கொச்சி டர்க்கர்ஸ் அணியை போலவே சகாரா குழுமத்தை சேர்ந்த புனே வாரியர்ஸ் அணிக்கும் பிசிசிஐ 2014 ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது. 

2010ம் ஆண்டு ஐபிஎல்லின் தலைவராக இருந்த லலித் மோடி கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு முதலில் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகரின் உத்தரவின் பேரில் ஐபிஎல்லில் கொச்சி டர்க்கர்ஸ் அணி விளையாடியது. இருப்பினும் அந்த சீசனில் எட்டாவது இடத்தை மட்டுமே பிடித்தது. கொச்சி டர்க்கர்ஸ் அணியில் கிரேம் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஜெரோம் டெய்லர், யுவராஜ் சிங், ஏஞ்சலோ மேத்யூஸ், ஆஷிஷ் நெஹ்ரா, முத்தையா முரளிதரன், பிரெண்டன் மெக்கல்லம் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். தற்போது கொச்சி அணிக்கு தீர்ப்பு சாதகமாக வந்துள்ளதால் அடுத்த ஆண்டு இந்த அணி மீண்டும் ஐபிஎல்லில் இடம் பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

மேலும் படிங்க: என்னால் தான் இந்த விஷயம் அணியில் நடந்தது – உண்மையை சொன்ன பும்ரா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.