டிக்கெட் முன்பதிவா… வங்கி சம்பந்தமான ஏதேனும் விஷயமா… இப்படி எந்த விஷயத்திற்கு சென்றாலும், இந்தியாவில் முதலில் கேட்கப்படும் ஆவணம் ‘ஆதார்’. ஆனால், எப்போதும் ஆதார் நம் கையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பிரச்னைக்கு வரப்போகிறது ஒரு புதிய தீர்வு.
ஜெராக்ஸ் வேண்டாமே!
வரும் வாரங்களில் UIDAI புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆப் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்களது ஆதாரை சமர்ப்பிக்க முடியும்.

இந்த ஆப்பில் ஆதார் கியூ.ஆர் கோடு வடிவில் இருக்கும். அதை ஸ்கேன் செய்தால் ஆதாரை சமர்பித்து விட முடியும். இதனால், இனி ஆதார் காப்பிகளை எடுக்க ஜெராக்ஸ் கடைகளைத் தேடி அலைய வேண்டாம்.
ஆதார் இருவகை
ஸ்கேன் செய்து சமர்ப்பிப்பதிலும் இரு ஆப்ஷன்கள் உண்டு. ஆதார் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதில் நம்முடைய அனைத்து தகவல்களும் இருக்கிறது. அப்போது அதை எவ்வளவு பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும்? இதை எளிதாக்குவது போல, நீங்கள் ஆதாரை சமர்ப்பிக்கும் போது, அது முழுமையாக வேண்டுமா… மாஸ்க்டாக (Masked) வேண்டுமா என்று நாமே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
மேலும், இனி வீட்டிலேயே ஆதார் அப்டேட்டுகளை சில கிளிக்குகளில் எளிதாக செய்துகொள்ளலாம். வரும் நவம்பர் முதல் பெயர், முகவரி, போன் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை உரிய சான்றுகள் கொடுத்து அப்டேட் செய்யலாம்.
கைரேகை மற்றும் கருவிழி பதிவிற்கு மட்டும் ஆதார் சென்டர்களுக்கு சென்றால் போதும்.
எதற்காக இது?
இந்த வசதி மூலம் நீண்ட நேரம் காத்திருப்பு மற்றும் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. மேலும், யாருக்கு எந்தத் தகவல் கொடுத்தல் போதும் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம்.