டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
ஈரானிடம் 10-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயாரிக்க தேவையான யுரேனியம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஈரானிடம் உள்ள யுரேனியம் தற்போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. யுரேனியத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்டினால் அணுகுண்டுகளை தயாரிக்க முடியும்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை பல மாதங்கள் நீடித்தும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் நடான்ஸ் நகரில் பூமிக்கு அடியில் செயல்பட்ட அணுசக்தி தளம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்பகான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்நுட்ப மையம், அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவை மீதும் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் 14 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் போர் மூண்டது. இரு நாடுகளும் கடந்த 10 நாட்களாக அதிதீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு அடியில் சுமார் 90 மீட்டர் ஆழத்தில் அணுசக்தி தளம் செயல்பட்டு வந்தது. இது ஈரானின் அணுசக்தி கோட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த தளம் மீது சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. ஆனால், மலைக்கு அடியில் அணுசக்தி தளம் இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ‘பூமியை துளைக்கும் சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தின் ஜிபியு-57 பங்கர் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினால் மட்டுமே போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடியும்’ என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ – இந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படையின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறிவைத்து ஜிபியு-57 பங்கர் ரக வெடிகுண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் தலா 2 குண்டுகள் என மொத்தம் 14 குண்டுகளை வீசின. இவை 90 மீட்டர் ஆழத்துக்கு பூமியை துளைத்து சென்று, வெடித்து சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்றிலுமாக சேதமடைந்தது.
ஈரானின் நடான்ஸ், இஸ்பகான் நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள், ஜிபியு-57 பங்கர் வெடிகுண்டுகளை வீசின. அதேநேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடியில் முகாமிட்டிருந்த அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவுகணைகள் சீறி பாய்ந்தன. இந்த ஏவுகணைகளும் நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களை அடுத்தடுத்து தாக்கின. அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கிகளின் தாக்குதல்களால் ஈரானின் 3 அணுசக்தி தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஆலோசனை: இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம். சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.
ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த துறைமுகத்தில் இந்திய தரப்பில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இஸ்ரேலுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது. பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இரு நாடுகள் இடையிலான போர் குறித்து இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே தொலைபேசியில் பேசியுள்ளனர். இந்த சூழலில், போர் தீவிரமடைந்து, ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில்,பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ட்ரம்ப் எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறியதாவது: அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரித்தால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, ஈரானின்3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்க ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது. இதில், 3 தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் உடனே அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும். ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அழிப்போம்’ என்று ஈரான் கடந்த 40 ஆண்டுகளாக மிரட்டி வருகிறது. ஈரானின் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கானோரை இழந்துள்ளோம். இனிமேலும் ஈரானின் அத்துமீறல்களை சகித்துக்கொள்ள முடியாது. ஈரான் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானிகளை பாராட்டுகிறேன். உலகின் வேறு எந்த ராணுவத்தாலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியாது. ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்த இஸ்ரேல் ராணுவத்தையும் பாராட்டுகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார். இதுபற்றி ஈரான் அதிபர் பெசெஷ்கியன் கூறும்போது, ‘‘அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது’’ என்றார்.
அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை: ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய3 இடங்களில் உள்ள அணுசக்தி தளங்களை அமெரிக்கபோர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் அணு கதிர்வீச்சு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. எனினும், அணு கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை. ஈரானின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, ‘சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை.மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்று சவுதி அரேபியாவின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று கத்தார், குவைத், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அணுசக்தி ஆணையங்கள், வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் ஆகியவையும் தெரிவித்துள்ளன.