அமெரிக்க தாக்குதலால் ஆவேசம்: இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள் – ஈரானின் புது ‘வியூகம்’ என்ன?

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான கடும் கோபத்தில் உள்ள ஈரான் பல்வேறு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. இதனிடையே, ஆவேசத்தின் உச்சமாக, இஸ்ரேல் நகரங்கள் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான்.

அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையாக பதிலடி தந்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில், ஈரான் நாட்டின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது, இந்தப் போரை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது.

‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் ஈரான் அணுசக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. “ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபர்தோ ஆகிய இடங்களை குறிவைத்து தாக்கினோம். இந்த ஒருங்கிணைந்த தாக்குதலில் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பாறையில் ஊடுருவி தாக்கும் 14 ஜிபிஐ-57 குண்டுகள் மற்றும் பெர்சியன் வளைகுடா மற்றும் அரபிக் கடலில் இருந்த நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வீசப்பட்ட 30 டொமஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.

இதுபோன்ற தாக்குதலை இதுவரை எந்த நாடும் நடத்தியதில்லை. பி-2 குண்டு வீச்சு விமானங்கள் ரேடாரில் சிக்காமல் ஈரான் வான் எல்லைக்குள் புகுந்து, தாக்குதல் நடத்திவிட்டு திரும்பியது. நாங்கள் ஈரான் ராணுவ வீரர்களையோ, பொதுமக்களையே குறிவைக்கவில்லை. இந்த திட்டம் ஈரான் ஆட்சி மாற்றத்துக்கானது அல்ல. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முறியடித்துள்ளோம்’ என்று அமெரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,“ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையங்களை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அமெரிக்க ராணுவத்தின் மிகப் பெரிய வெற்றி” என்றதுடன், “அமைதி நிலவ வேண்டும், இல்லை என்றால் சோகம்தான் ஏற்படும்” என்று ஈரானை அவர் மீண்டும் எச்சரித்தார்.

ஈரான் ‘வியூகம்’ என்ன? – அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தப் போரில் களமிறங்கிய அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது ராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளது’ என ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

“ஈரான் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுத்துள்ளது. அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது” என்று ஈரான் உச்ச தலைவர் கமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் தெரிவித்துள்ளார். பஹ்ரைன், கத்தார், ஈராக், சிரியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் எனத் தெரிகிறது.

அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சந்தித்து பேச்சுவார்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஈரானின் நண்பன் ரஷ்யா. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்துவது வழக்கம். ரஷ்ய அதிபருடன் தீவிர ஆலோசனை நடத்துவதற்காக அவரை சந்திக்க உள்ளேன்” என்றார். அமெரிக்காவின் தாக்குதலை ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இஸ்ரேல் உடனான போரில் ரஷ்யாவின் உதவியை ஈரான் நாடும் எனத் தெரிகிறது.

இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்காவின் நள்ளிரவுத் தாக்குதலால் கடும் கோபமுற்றை ஈரான், ‘கொராம்ஷர்-4’ என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வகை ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரிய அளவில் சேதம் அடைந்து வருவதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டிடங்கள் இந்தத் தாக்குதலில் கடும் சேதம் அடைந்தன. இதில் பலரும் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகள் அணிவகுத்து சீறி வருவதால், இஸ்ரேல் மக்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.