மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடந்து வருகிறது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த மாநாடு சுமார் 3 மணிக்கு தொடங்கியது. மேலும், இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதாவது, “உலகத்தின் யூதர்கள் 0.2 விழுக்காடுகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல் முறையை பாதித்ததற்காக நான்கு நாடுகளுடன் இஸ்ரேல் சண்டைப் போட்டு கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் விமானம் 37 மணிநேரம் தரையில் படாமல் வந்து தாக்குதல் நடத்திவிட்டு சென்றிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டால், சிலருக்கு பிரச்னை. இஸ்ரேல், அமெரிக்கா எப்படி நின்றுகொண்டிருக்கிறது. சம காலத்தில் இந்தியாவும் தங்களது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்யும்போது எதிர்வினையாற்றி இருக்கிறது.
இந்து மக்களிடம் ஒற்றுமை வராது என்று அரசியல்வாதிகள் இங்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். வட தமிழ்நாட்டில் பள்ளிக்கு ஒரு குழந்தை ருத்ராட்சம் அணிந்து செல்ல முடிவதில்லை.
நமது வாழ்வியல் முறை தொந்தரவு செய்யப்படும் போது, நாமும் கேள்வி கேட்க வேண்டும். முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் பிரச்னை செய்தால் அனைத்து வீடுகளிலும் சூர சம்ஹாரம் செய்துவிட்டு, திருத்தணிக்கு அமைதியாக சென்றுவிடுவோம் என்று இந்த மாநாட்டின் மூலம் காட்டுகிறோம்.
இந்து மதத்தினருக்கு ஒன்று, இந்து மதம் சாராத ஒருவருக்கு ஒன்று என்று தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்?
பணம் இருப்பவருக்கு ஒரு மாதிரி, பிறருக்கு ஒரு மாதிரி என்று அறநிலையத் துறைக்கு கீழ் இருக்கும் 40,000 கோவில்கள் நடந்துகொண்டிருக்கின்றது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் இப்போது தமிழ்நாடு, ஆன்மீகம், இலக்கியம் அனைத்தும் வேறு வேறு என்று ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படி இல்லை. நமது மண்ணில் மூன்றும் இணைந்தது தான்.

நான்கு நாள்களுக்கு முன்பு, திருப்பரங்குன்றத்திற்கு எம்.பி ஒருவர் வந்தார். அவரிடம் ஒரு அம்மா செல்பி கேட்டார். அப்போது அவர் திருநீற்றை அழித்துகொண்டு செல்பி எடுத்தார்.
ஆனால், அடுத்து ஆண்டு இவர்கள் ஓட்டு பிரச்னைக் கேட்டு நம்மிடம் வருவார். அப்போது நாம் அவர்களைப் பார்த்துகொள்ள வேண்டும்.” என்றார்.