கோவை: திமுக கூட்டணி உடையும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், பாஜகவினரும் கூறுவது போன்று கூட்டணியில் எந்தவிதமான ஓட்டையும் இல்லை. நெல்லிக்காய் மூட்டை தான் சிதறும். சிதறுவதற்கு இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இது எஃகு கோட்டை கூட்டணி. இது சிதறுவதற்கு வாய்ப்பு இல்லை.
சிறு சிறு பிரச்சினைகள் இருந்தால் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். திமுக கூட்டணி உடையும் என அதிமுகவும் பாஜக-வும் பகல் கனவு காண்கின்றன. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழகத்தில் யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார்.
அயோத்தியில் ராமர், பாஜகவை கைவிட்டு விட்டார். மக்களை நம்பி பாஜக கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பாஜக. இதுவரை மணிப்பூருக்கு பிரதமர் போகவில்லை. மணிப்பூருக்கு செல்லாமல் இங்கே முருகன் மாநாடு என்றால் முருகன் மன்னித்து விடுவாரா? தமிழகத்துக்கு வர வேண்டிய கல்வி நிதி தராமல் மறுக்கிறது. தமிழ் கடவுள் முருகனை ஏமாற்றி வேஷம் போட முடியுமா? பாஜக வேஷம் சில மக்களை ஏமாற்றலாம். முருகனை ஏமாற்ற முடியாது.
அமித்ஷாவின் மகனே ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களும் தற்போது ஆங்கிலம் பேசுகிறார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது மொழியை திணிக்கிறார்கள். தமிழ் மொழியை சிதைக்கிறார்கள், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார்.” இவ்வாறு அவர் கூறினார்.