‘அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்’ – ஈரான் மீதான தாக்குதல்களுக்கு வட கொரியா கண்டனம்

பியாங்யாங்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், “மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செயல்களால் தற்போது மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்.

நாங்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையால் நசுக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரை உருவாக்கும் செயல்களுக்கு எதிராக நீதியான சர்வதேச சமூகம் ஒருமனதாக கண்டனம் மற்றும் நிராகரிப்பு குரலை எழுப்ப வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரானும் வட கொரியாவும் தங்களுக்குள் பல வகைகளில் நட்புறவை பேணி வருகின்றன. மேலும் வடகொரியா ஈரானுக்கு ராணுவ ஒத்துழைப்பும் வழங்குவதாக அவ்வப்போது பேச்சுகள் எழுந்துள்ளது. அதேபோல பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுதங்களையும் வடகொரியா ஈரானுக்கு வழங்குவதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.