புதுடெல்லி: ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்து திட்டத்தின் மூலம் ஈரானில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரானில் உள்ள இந்திய தூதரகமும் மத்திய வெளியுறவு அமைச்சகமும் செய்து வருகிறது. இதுவரை 4 தனி விமானங்களில் மாணவர்கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்ளனர். இந்நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்களுடன் 5-வது விமானம் நேற்று மாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.
இதன்மூலம் இதுவரை ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இன்றும் நாளையும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதவிர, நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களையும் ஈரானிலிருந்து அழைத்துவர தேவையான உதவிகள் செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
டெஹ்ரானில் சிக்கியிருந்த இந்தியர்கள் முதலில் 150 கி.மீ. தொலைவில் உள்ள குவாம் நகருக்கு தரை மார்க்கமாக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மஷாத் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேலுடனான போர் காரணமாக வான்வழி மூடப்பட்டிருந்தாலும், இந்தியர்கள் வெளியேற வசதியாக சிறிது நேரம் வான்வழியை ஈரான் திறந்து விட்டது.
இதனிடையே இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி விமானத்தில் டெல்லி வந்தடைந்த மிஸ்பன் கூறும்போது, “ஈரானில் ஆங்காங்கே சடலங்களை பார்த்தோம். வெடி சத்தங்களை கேட்டோம். வான் வழி தாக்குதலை கண்டோம்’’ என்றார். காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் சுமரா ரஹ்மான் கூறும்போது, ‘‘நாங்கள் பயந்து போயிருந்தோம். இரவுகள் சைரன்களாலும், குண்டு வெடிப்புகளாலும் நிறைந்திருந்தன. ஆனால் இப்போது நாங்கள் வீடு திரும்பிவிட்டோம். இறைவன் விரும்பினால், எங்கள் படிப்பை முடிக்க பாதுகாப்பான நேரம் கிடைக்கும்போது நாங்கள் அங்கு திரும்பிச் செல்வோம்” என்றார்.