மும்பை: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மும்பை பெண் ஒருவரை அச்சுறுத்தி மர்ம நபர்கள் ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை சைபர் குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: தெற்கு மும்பை கிர்கான் பகுதியில் வசிக்கும் 64 பெண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்களில் இருந்து இம்மாதம் 3 அழைப்புகள் வந்தன. அதில் பேசிய ஒருவர் தன்னை டெல்லி தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி பிரேம் குமார் குப்தா என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லை காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அப்பெண் மீது வழக்கு உள்ளதாகவும் இதற்கு ரூ.50 லட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறி அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அப்பெண்ணின் புகைப்பட அடையாள அட்டை ஒன்றை காட்டி நம்பச் செய்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த அப்பெண் கடந்த 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.22.4 லட்சம் செலுத்தியுள்ளார்.
பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் 13-ம் தேதி மும்பை தெற்கு பிராந்திய சைபர் போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.