மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் காவல் துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்பட 52 நிபந்தனைகளை மாநகர காவல் துறை விதித்தது. இதில், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அந்தந்த உட்கோட்ட காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பாஸ் வாங்க வேண்டும்; மாநாட்டு திடலில் ட்ரோன்கள் பறக்கக்கூடாது; மாநாடு நடக்கும் இடத்துக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்; முருகனின் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி உள்ளிட்ட 6 நிபந்தனைகளுக்கு இந்து முன்னணி அமைப்பு ஆட்சேபம் தெரிவித்து நீதிமன்றத்தை அணுகியது. வாகன பாஸ் தவிர்த்து, பிற 5 நிபந்தனைகள் மாற்றியமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல், பிற மதங்களை ஒப்பிட்டு பேசியது என நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவல் துறை நிபந்தனைகளை மீறியதாக கூறி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, மாநாட்டில் நீதிமன்றம் மற்றும் காவல் துறை நிபந்தனை மீறல்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய மாநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது.
விதிமீறல் விவரங்களை சேகரிக்க காவல் ஆணையர் லோகநாதன் அறிவுறுத்தி உள்ளார். அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள், நுண்ணறிவு பிரிவினரும் மாநாடு நடந்த பகுதி, மாநாட்டில் தலைவர்களின் பேச்சு மற்றும் மாநகர சாலைகளில் நடந்த விதிமீறல் குறித்து வீடியோ, போட்டோ ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். விதிமீறல் இருந்தால் அரசு சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “இந்த மாநாட்டையொட்டி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம். இதற்காக பல்வேறு நிபந்தனைகளும் விதித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இதன் அடிப்படையில் காவல் துறை நிபந்தனைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டுள்ளதா என்ற விவரங்கள் சேகரிக்கிறோம். இது தொடர்பான அறிக்கை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்த முடிவெடுக்கப்படும்,” என்றனர்.