பிரான்சில் காட்டுத்தீ: 13 பேர் காயம்; 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதனால், விமானம், பஸ், ரெயில் சேவைகளும் முடங்கின. முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன. பிரான்சின் 2-வது மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, பிரான்சின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அந்த நகரத்தின் மேயர் பென்வாயிட் பாயன் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுள்ளதுடன், தொடர்ந்து வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொண்டார்.

இந்த காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர் தீயணைப்பு வீரர்கள் ஆவர். இதனால், அந்த பகுதியில் சிகரெட் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளதுடன் தீப்பற்ற கூடிய பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

720 தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர். 220 தீயணைப்பு வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும் விமானங்களும் சம்பவ பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

எனினும், 700 ஹெக்டேர்கள் பரப்பிலான நில பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன. 10 கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.