ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது.
அப்போது, மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றுகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதேசமயம், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தடுக்கப்பட்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் போக்கி விட முடியாது. இறைவனைக் கூட பார்க்க முடியவில்லை. தமிழிசையை ஏன் அனுமதித்தார்கள், என்னை ஏன் தடுத்தார்கள்? எனப் புரியவில்லை. அதிகாரிகள் அதிகாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும்.” என ஆதங்கப்பட்டிருந்தார்.

பின்னர் இதையறிந்த வி.சி.க எம்.பி ரவிக்குமார், “செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார்? என்பதை அறிய முதல்வர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை.” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்பாக எக்ஸ் தளத்தில் விளக்கமளித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார்.
தனது பதிவில் தமிழிசை சௌந்தரராஜன், “என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன். இறை சேவகர்களின் ஏற்பாடுகளை விட சேகர்களின் கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன். வல்லக்கோட்டையில் குடமுழுக்கு என்று கேள்விப்பட்டேன்.
என் அப்பன் என்னை அங்கே அழைக்கிறான் என்றே முடிவெடுத்தேன். 2 மணிநேரம் முன்னாலேயே சென்று விட்டேன் பொதுமக்களோடு ஒருவராகவே காத்திருந்தேன்.
முத்தரசர்கள் முனகுவதைப் போல எந்த இருக்கையும் எனக்கு அளிக்கப்படவில்லை நானும் கேட்கவும் இல்லை முருகனின் பக்தையாகவே நின்றே காத்திருந்தேன்.
மேலே போக முடியுமா என்று கேட்டேன். நீங்கள் மட்டும் என்றால் வாருங்கள் என்றார்கள். என்கூட வந்த எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டுமே ஏறினேன்.

காலதாமதமாகவே சிலர் அவசரமாக வந்தார்கள். பக்தர்களாக அல்ல தன்னுடைய பதவிகளை தோளில் சுமந்து வந்தார்கள்.
நான் மட்டும் ஏற முடியாது உடன் வந்தவர்களும் ஏற வேண்டும் என்றனர். முருகன் குடமுழுக்கு போடப்பட்ட மேடை இது, அரசியல் மேடை அல்லவே.
பாதுகாப்பு கருதி அவர் மட்டுமே ஏறட்டும் என்றனர். கூட வந்தவர்கள் யார் தெரியுமா எல்லோரும் ஏற வேண்டும் என்றார் பதவியை சுமந்தவர்.
மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதாமல் ஆணவத்தோடு இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஏறினார்கள்.
குடமுழுக்கு சிறப்பாகவே நடந்தது. அதற்குப் பின் நடக்கும் சிறப்பு தரிசனத்தைக் காண பொதுமக்களோடு பொதுமக்களாகவே பக்தையாகவே கூட்டத்தோடு சென்று முருகன் முன்னால் அமர்ந்தேன்.
பொதுமக்களோடு காத்திருந்தேன், முருகனும் காத்திருந்தார். பெருமைமிகு பதவியாளர் வரவேண்டும் என்று காத்திருந்தனர்.
நேரம் கடந்து கொண்டே இருந்தது பெரும் பதவியாளர் வரவில்லை. ஏனென்று கேட்டதற்கு சிறப்பு வழியைத் திறக்க வேண்டும் என்று காத்திருக்கிறார் என்றார்கள்.
சிறப்பு கதவு திறக்க சற்று தாமதமானதால் கோபம் கொண்டு சென்றுவிட்டாராம்.
என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. …
என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன்.. இறை சேவகர்களின்.. ஏற்பாடுகளை விட… சேகர்களின்.. கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன்… சேவகர்களின் வழிபாட்டை விட சேகர்களின் விளம்பர வெளிப்பாடு அதிகமாக இருந்தது……— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) July 9, 2025
ஆனால், ஏதோ அங்கே பக்தியில் வெளிப்பாடுதான் இருந்தது தவிர அதை சாதியின் வெளிப்பாடு என்று தவறாக பிரகடனப்படுத்தி, பத்தோடு பதினொன்றாக நான் நிற்க வேண்டுமா என்று பொதுமக்கள் தரிசனத்தையும் ஆணவத்தோடு ரணப்படுத்திச் சென்றதை, சில ரவிக்குமார்கள் வன்கொடுமை என மாற்றிப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பெரும்பதவியாளர் பெருந்தகை கேட்டிருக்கிறார் பெண்கள் எல்லாம் போகும்போது நான் போகக்கூடாதா என்று.
ஆக அங்கு நடந்தது வன்கொடுமை அல்ல, பெண் கொடுமைதான். நான் அதை வெளிப்படுத்தவில்லை ஏனென்றால் நான் அங்கு சென்றது வழிபாட்டுக்கு மட்டுமே.
பெண்ணை எல்லாம் விடுவீர்கள் என்னை விடமாட்டீர்களா என்று பாகுபாடு காட்டியது போல் அங்கே பாலின பாகுபாடு நான் பார்க்கவில்லை.
இல்லாத ஒரு பிரச்சனையை இருப்பதுபோல் பெரிதாக்கி மிக நன்றாக நடந்த குடமுழுக்கை குழப்பி பக்தர்களுக்கு எல்லா சங்கடத்தை ஏற்படுத்திவிட்டு, தான் சங்கடப்பட்டதைப் போல ஏற்படுத்திய நாடகத்திற்கு சேகர்கள் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்டார்களாம்.
திருப்பதியில் பல மணி நேரம் காத்திருக்கும் பொழுது உங்களால் தமிழ்நாட்டில் கோயிலில் காத்திருக்க முடியாதா? என்று மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்காமல், ஆணவமாகப் பேசியவர் இன்று இல்லாத ஒரு பிரச்சனைக்கு வீட்டிற்குச் சென்று சேகர்கள் மன்னிப்பு கேட்டார்களாம்.
பதவியை சுமந்து வந்தவர்கள் பழியை சுமத்தி சென்றிருக்கிறார்.

அங்கே நடந்தேறியது கட்டையில் பலர் ஏற முடியுமா என்ற கந்தனின் பக்தியாளரின் பாதுகாப்பு தவிர, கட்டப்பஞ்சாயத்து இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அரங்கேறிக்கொண்டிருக்கும் நாடகங்களை எல்லாம் அறுபடை நாயகன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.
என் அப்பன் பக்தியை சுமந்து பெரும் பக்தியாளர்களாக வந்தால் மக்கள் ஆசீர்வதிப்பார். பதவியை சுமந்து ஆணவப் பெருந்தகையாளராக வந்தால்?” என்று விமர்சித்திருக்கிறார்.