ஏடன்,
ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஒருபுறம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியை கடந்து செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் கப்பலை இலக்காக கொண்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அதனுடன், கப்பலில் பயணிக்கும் ஊழியர்கள், பணியாளர்கள், பயணிகளை சிறை பிடித்து வைத்தும், கப்பலில் உள்ள பொருட்களை சூறையாடியும் வருகின்றனர். இதனை தொடர்ந்து, அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், செங்கடலில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதில், லைபீரிய நாட்டு கொடியுடன் வந்த எடர்னிட்டி சி என்ற சரக்கு கப்பலை கடுமையாக தாக்கினர். இதில் கப்பல் பணியாளர்கள் 3 பேர் பலியானார்கள்.
இதுபற்றி ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் கூறும்போது, கப்பலில் இருந்த 25 பேரில் 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தனர். எனினும், கிளர்ச்சியாளர்களின் கடுமையான தாக்குதலில் அந்த கப்பல் மூழ்க தொடங்கியது. அதனை மீட்பதற்கான முயற்சி பலனளிக்காமல் கப்பல் மூழ்கி விட்டது என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், பணியாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இது செங்கடல் பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த கடல் பகுதி வழியே ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகள் கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், இந்த பகுதியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதன்படி, 2023-ம் ஆண்டு நவம்பர் முதல் 2024-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தாக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், செங்கடலில் சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூழ்கடித்தது அந்த பகுதியில் வர்த்தக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.