விருதுநகர்: விருதுநகரில் சங்கக் கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 44 பேரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் முத்துராமலிங்கம் தெருவில் 3,700 சதுர அடியில் கட்டிய அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் உள்ளது. கடந்த 2019-ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அன்பரசனுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மாவட்டக் குழுவை மாநில குழு கலைத்தது.
இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட சங்கம் தொடர்ந்த வழக்கில், மாவட்ட குழு கலைக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019 முதல் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகிகளே பராமரித்து வந்தனர். 2023ல் விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துக்கு மாற்றாக, ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தைமாவட்டக் குழு நிர்வாகிகள் தொடங்கினர்.
அதேநேரம், சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துக்கு மாவட்டச் செயலாளராக கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று முன்தினம் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.நேற்று 2-வது நாளாக அக்கட்டிடத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, கட்டிடத்தை ஏற்கெனவே நிர்வகித்து வந்த அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திரண்டு வந்து கட்டிடத்தைக் கைப்பற்ற முயன்றனர். அப்போது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியதில் ஊழியர்கள் பலர் காயமடைந்தனர்.
தொடர்ந்து, போலீஸார் இரு தரப்பினரையும் கட்டிடத்திலிருந்து வெளியேற்றினர். அப்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், சங்கக் கட்டிடத்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அரசு ஊழியர் சங்கத்தினர் 34 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, மற்றொரு சங்கமான தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் 10 பேரை விருதுநகர் மேற்கு போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
கட்டிடத்துக்கு `சீல்’ வைப்பு: இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. வட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிரச்சினைக்குரிய கட்டிடத்தை வருவாய்த் துறையினர் பூட்டி `சீல்’ வைத்தனர்.