பாட்னா: வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது: இதுவரை, மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன, ஒட்டுமொத்த அளவில் 39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கு நிச்சயமாக எட்டப்படும்.
இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2025-2030) ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் இலக்கை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடைய தனியார் துறை அதிலும் குறிப்பாக தொழில்துறை பிரிவுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பிஹார் மாநில தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையும் இன்னும் அறிவிக்கவில்லை.