நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா நிலமோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய குருகிராம் காவல் துறை, அவருக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில், ராபர்ட் வதேரா மீதும், அவரது நிறுவனமான ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிடி பிரைவேட் லிட். நிறுவனம் மீதும், வேறு சிலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. தற்போது முடக்கப்பட்டுள்ள 43 சொத்துகளும், ராபர்ட் வதேரா மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் தேதி ஹரியானாவின் குருகிராம் மாநகரின் ஷிகோபூர் பகுதியில் 3.53 ஏக்கர் நிலத்தை, ஓங்காரேஸ்வர் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிட் நிறுவனத்திடம் இருந்து வதேராவின் நிறுவனம் வாங்கியது.

இந்த நிலம் முறைகேடாக கையகப்படுத்தப்பட்டதாகவும், வதேரா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வணிக வளாகம் கட்ட அனுமதி பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ள அதிகாரிகள், இது தொடர்பாக ராபர்ட் வதேரா, ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட், சத்யானந்த் யாஜி, கெவல் சிங் விர்க், ஓங்காரேஷ்வர் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 11 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக புதுடெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.