12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங் கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19, 20-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 80 டிகிரி முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 20-ம் தேதி வரை அதிகபட்சம் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட், நடுவட்டம், கோவை மாவட்டம் சின்கோனாவில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.