தமிழ் சினிமாவின் பொக்கிஷ கலைஞரான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று (ஜூலை 21).
இதனை முன்னிட்டு காலை முதலே திரைபிரபலங்கள் பலரும் சென்னையில் அவரது சிலைக்கு நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வரிசையில், நடிகர் தியாகு இன்று சென்னையில் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகு, “சிவாஜி அப்பா எனக்கு ரொம்ப வேண்டியவர். என்மீது ரொம்ப பாசக்காரர்.
என் திருமணத்துக்கெல்லாம் வந்திருக்கிறார். என்னை எப்போதும் கும்பகோணத்தான் என்றுதான் கூப்பிடுவார்.
அவருடன் மூன்று படம் நான் நடித்திருக்கிறேன். அவருடைய ரசிகன் நான்.
வி.கே. ராமசாமிகிட்ட சிவாஜி அப்பா, “மின்சார சுடுகாட்டுக்கு 240 ரூபாய் தான். என்னை எப்படியாவது எரிச்சிருங்கடா” என்பார்.
மின்சார சுடுகாட்டுக்கு ஊர்வலமாகப் போகும்போது நானும் விஜயகாந்தும்தான் எடுத்தோம்.
அப்போது தவசி படம் பண்ணிட்டு இருந்தோம். அதுக்கு முன்னாடி நாள் இரவு, சிவாஜி அப்பா இறந்துட்டாருனு அவர்தான் எனக்கு சொன்னார்.

அற்புதமான மனுஷன் (சிவாஜி). அவர் மாதிரி ஒரு நடிகர் பிறப்பது ரொம்ப கஷ்டம்.
சிவாஜி அப்பாவோட 24-வது நினைவு நாளில் அவரைப் பார்ப்பது நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது.
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று கண்களில் கண்ணீர் ததும்ப கூறினார்.

தொடர்ந்து, அவருடைய உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தியாகு, “நல்லாதான் இருக்கேன். ஆனா என் ஆருயிர் நண்பன் விஜயகாந்த் போனதுல இருந்து என் உடம்பு போய்டுச்சு.
கொரோனா எல்லோரையும் படாத பாடு படுத்திவிட்டது. விவேக்கும் போய்ட்டான்.
அதுல இருந்து ஒரு பயம் வர ஆரம்பிச்சிருச்சு எனக்கு. என் காலில் முறிவு ஏற்பட்டது.
என் பொண்ணு டாக்டராக இருக்கிறதால தப்பிச்சேன். அதுல இருந்து கவனமா இருக்கேன்” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…