புதுடெல்லி: கர்நாடகாவில் ஒரு மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததற்கான 100% ஆதாரம் உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தோம். அங்கு ஆயிரக் கணக்கில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வயது 45, 50, 60, 65 ஆக உள்ளது. அதேநேரம் 18 வயதுக்கு மேற்பட்ட பல வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுக்கு எங்களிடம் 100% ஆதாரம் உள்ளது.
இதுபோல பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி என்ற பெயரில் முறைகேடு நடக்கிறது. தேர்தல் ஆணையம் தனது பணியை சரியாக செய்யவில்லை.
இந்த பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகின்றனர். இதன் மூலம் அவர்கள் தவறுசெய்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன் உங்களை அணுகுவோம். மக்கள் மத்தியிலும் எடுத்துச் சொல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.