புதுடெல்லி,
சீன வெளியுறவு மந்திரியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருக்கும் வாங் யி, வரும் 18-19 தேதிகளில் இந்தியா வருகிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பின் பேரில் அவர் இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் போது இந்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரையும் சந்திக்க உள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாங் தனது பயணத்தின் போது, இந்திய – சீன எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 24-வது சுற்றில் இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே, சீனா வெளியுறவு மந்திரியின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.