டெல் அவிவ்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் குறிப்பாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்து, ஆயுதக்குறைப்புக்கு முன்வராவிட்டால் ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்’’ என்று எச்சரித்துள்ளார்.
காசா நகரை முற்றுகையிட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி வழங்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்ததை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில் காசா நகரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. மக்களை தெற்கே செல்லுமாறு எச்சரித்துள்ளது.