புதுடெல்லி,
வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 21-ந் தேதி அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அந்த மசோதா சட்டம் ஆனது.
இந்த நிலையில், புதிய வருமானவரியின் அடுத்தகட்ட பணிகள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஆர்.என்.பார்பத் கூறியதாவது:-
புதிய வருமானவரி சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. அதற்கு முன்பு, அச்சட்டத்தின் விதிமுறைகளை வகுப்பதற்காக தலைமை ஆணையர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் ‘விதிமுறைகள் மற்றும் படிவங்கள்’ குழு அமைக்கப்பட்டது.
அக்குழு, வரைவு விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு அந்த விதிமுறைகள் இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். புதிய எளிமையான படிவங்களை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.